Last Updated : 07 Dec, 2020 07:45 PM

 

Published : 07 Dec 2020 07:45 PM
Last Updated : 07 Dec 2020 07:45 PM

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு நில அபகரிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் பிற மாநிலங்களில் இருப்பது போல் தேர்தலுக்கு முன்பு நில அபகரிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த முத்தையா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி துறையூரில் உள்ள எனது நிலத்தை 2008-ல் தனி நபர்கள் ஆக்கிரமித்து, அவர்கள் பெயருக்கு பட்டா மாற்ற முயற்சி செய்தனர்.

இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகத்தில் பல இடங்களில் நில அபகரிப்பு நடைபெறுகிறது. தனி நபர்கள் மற்றவர்களின் நிலங்களை அபகரித்து தங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்து வருகின்றனர். ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் மாநிலங்களில் நில அபகரிப்பை தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ஆந்திரா, கர்நாடகா, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் தேர்தலுக்கு முன்பு நில அபகரிப்பு தடை சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
பின்னர் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x