Published : 05 Oct 2015 09:35 AM
Last Updated : 05 Oct 2015 09:35 AM
சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் கடந்த 27-ம் தேதி தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அஜய் என்கிற 5 வயது சிறுவன் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா நூல் பட்டம் விட்ட ராபர்ட், டேவிட் மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்த பிரதீப், குமார் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது போன்று சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின்படி, தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகரம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இதில் மாஞ்சா நூல் தயாரித்தவர்கள், விற்பனை செய்தவர்கள், மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டவர்கள் என 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக போலீஸார் நடத்திய சோதனையில், மாஞ்சா நூல் உருண்டைகள்-85, வெள்ளை நூல் உருண்டைகள் -120, லோட்டாய்கள் - 140, மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரம்-1, இன்டக்சன் ஸ்டவ்-1, மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களான வஜ்ஜிரம் 2 கிலோ, கலர் பொடி 2 கிலோ, கண்ணாடி தூள் 7 கிலோ, சூடு கொட்டை மற்றும் கந்தகம் ஒரு கிலோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், மாஞ்சா நூலை பயன் படுத்தி பட்டம் விடுவதை தவிர்க்க வும், தங்கள் குழந்தைகள் இச்செயலில் ஈடுபடாமல் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் நேற்று நடத்தப்பட்டன.
புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் ஆர்.சுதாகர் தலைமையில் புளியந்தோப்பு, செம்பியம், மகாகவி பாரதி நகர் சரகங்களில் உள்ள காவல் நிலைய பகுதிகளில் பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப் பட்டது. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுவதால் ஏற்படும் தீமைகள், உயிர் சேதங்கள் மற்றும் அபாய விளைவுகள் குறித் தும் எடுத்துரைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT