

புரெவி புயல் மன்னார் வளைகுடாவுக்கு வந்த நிலையில், அது படிப்படியாக வலுகுறைந்து தற்போது வளிமண்டலச் சுழற்சியாக அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டலச் சுழற்சியாக நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (07.12.2020) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
08.12.2020 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
மணியாச்சி (தூத்துக்குடி) 16 செ.மீ.
வைப்பார் (தூத்துக்குடி) 12 செ.மீ.
கடம்பூர் (தூத்துக்குடி) 11 செ.மீ.
கயத்தாறு (தூத்துக்குடி), சீர்காழி (நாகப்பட்டினம்), காரைக்கால், சித்தார் (கன்னியாகுமாரி) தலா 9 செ.மீ.
தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை, வாலிநோக்கம் (ராமநாதபுரம்), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 8 செ.மீ.
குடவாசல் (திருவாரூர்), மணல்மேடு (நாகப்பட்டினம்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி) தலா 7 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.