Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

கரோனா வைரஸ் தொற்றுக்கான கோவேக்சின் தடுப்பு மருந்து 3-ம்கட்ட ஆராய்ச்சி இன்று தொடக்கம்

கரோனா வைரஸ் தொற்றுக்கான கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட ஆராய்ச்சி இன்று தொடங்குகிறது.

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை (கோவேக்சின்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி நிலையை எட்டியுள்ளது. மனிதர்களுக்கு அந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இந்தஆராய்ச்சி நடந்து வருகிறது. முதல்கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனை வெற்றி பெற்றதால், 2-ம் கட்டமாக 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. அவர்களின் உடல்நிலையைமருத்துவ நிபுணர்கள் கண்காணித்தனர். இதில் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், 3-ம் கட்டமாக 100 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பரிசோதனை இன்று தொடங்குகிறது.

சில வாரங்கள் ஆகலாம்

இதுகுறித்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோது, “மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிப்பதில் தற்போது 2 கட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்துள்ளோம். 3-ம் கட்ட ஆராய்ச்சி தற்போது தொடங்கப்படுகிறது. கோவேக்சின் மருந்தால் இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. ஆனாலும், அந்த மருந்தின் தன்மை, செயல்திறன் ஆகியவற்றை தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. அதற்கு இன்னும் சில வாரங்கள் வரை தேவைப்படலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x