Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

வேளாண் துறை இளைநிலை பெண் உதவியாளர் கழிப்பறை தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு: அரசு அலுவலக கட்டிடத்தில் கழிப்பறை இல்லை என உறவினர்கள் புகார்

காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா(24). மாற்றுத் திறனாளியான இவர், குரூப்-4தேர்வு எழுதி, களக்காட்டூர் வேளாண் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார்.

களக்காட்டூர் வேளாண் துறை அரசு கட்டிடத்தில் கழிப்பறை வசதிஇல்லை. இதனால், அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சக பெண் ஊழியர்கள் அனைவரும் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிப்பறையை பயன்படுத்தி வந்துள்ளனர். அலுவலகத்தில் கழிப்பறை வசதியில்லாததால் பெரிதும் சிரமம் ஏற்படுவதாக பெற்றோரிடம் கூறி பணிக்கு செல்ல மறுத்துள்ளார். ஆனால், அரசுப் பணி என்பதால் அனுசரித்து பணிக்கு செல்லுமாறு பெற்றோர் அறிவுரை கூறி பணிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில், அலுவலகத்தில் பணியில் இருந்த சரண்யா, நேற்றுமுன்தினம் மாலை அருகில் தணிகைவேல் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாத கழிப்பறையை மாற்றுத் திறனாளி பெண் பயன்படுத்தியபோது, மூடப்படாமல் இருந்த கழிப்பறை தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். கழிப்பறைக்கு சென்ற பெண் நீண்ட நேரமாகியும் திரும்பாததால், சக பெண் ஊழியர்கள் சென்று பார்த்தபோது தொட்டியில் சரண்யா விழுந்திருப்பது தெரிய வந்தது.

அக்கம் பக்கத்தினர் சரண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே சரண்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், பிரேதப்பரிசோதனை முடிந்து உடலைவாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், அரசு அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால்தான் மாற்றுத் திறனாளி பெண் உயிரிழந்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.

மேலும், குடும்பத்தில் உள்ள நபருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தியவருவாய் துறை அதிகாரிகள்உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிஅளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலை மாறுமா?

கிராமப்புறங்களில் உள்ள வேளாண் மற்றும் வருவாய்த் துறை அலுவலக கட்டிடங்களில் கழிப்பறை வசதி முற்றிலும் இல்லை என அத்துறையை சார்ந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளி பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகாவது, அனைத்து அலுவலகங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x