Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

‘நிவர்’, ‘புரெவி’ புயல்களால் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுவையில் வழக்கத்தைவிட அதிகமான மழை அளவு பதிவு: சென்னையில் கூடுதலாக 47 சதவீத மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் அக். 1-ம் தேதி முதல் டிச. 31-ம் தேதி வரையிலான காலம் வடகிழக்கு பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு வட தமிழகத்தில் வழக்கமான அளவும், தென் தமிழகத்தில் வழக்கமான அளவை விட குறைவாகவும் மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதை உறுதிப்படுத்துவது போன்றே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்.28-ம் தேதி தொடங்கியது.

அதன் பின்னர் நவம்பரில் குறிப்பிடும்படியாக மழைப் பொழிவு இல்லாமல் இருந்து. அதைத் தொடர்ந்து நவம்பர் இறுதியிலும், டிசம்பர் மாத தொடக்கத்திலும் உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் தமிழகத்தில் பரவலாக மழை கிடைத்தது.

பல இடங்களில் அதிகனமழை (ஒரேநாளில் 22 செமீ.க்கு மேல்) பெய்தது. இதன் காரணமாக தற்போது வழக்கமாக பெய்யும் மழை அளவை எட்டி, அதற்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த அக். 1-ம் தேதி முதல் டிச.6-ம் தேதி வரை 39.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 38.3 சதவீதம் மழை பெய்யும். தற்போது வழக்கத்தை விட 3 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 51 சதவீதமும், சென்னை மாவட்டத்தில் 47 சதவீதமும், விழுப்புரம் மாவட்டத்தில் 38 சதவீதமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது. அதேநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 38 சதவீதம், திருச்சிமாவட்டத்தில் 35 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழைக் காலம் முடிய இன்னும் 25 நாட்கள் இருப்பதால், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாகவே மழை கிடைக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x