சேதுக்கரையில் அலைகள் இன்றி அமைதியான கடல்: நாட்டுப் படகுகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்

புரெவி புயலால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள சேதுக்கரை கடற்கரை.
புரெவி புயலால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள சேதுக்கரை கடற்கரை.
Updated on
1 min read

புரெவி புயல் வலுவிழந்ததை அடுத்து சேதுக்கரையில் கடல் வழக்கத்துக்கு மாறாக அலைகள் இன்றி அமைதியாக இருந்தது. இதையடுத்து மீனவர்கள் தங்கள் நாட்டுப்படகுகள், வல்லங்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடல் அலைகள் அவ்வப்போது சீற்ற மாகவே காணப்படுகிறது. புரெவி புயல் இலங்கையில் இருந்து பாம்பனை நெருங்கிய நிலை யில் கடல் அலைகள் கடந்த 3 நாட்களாக வழக்கத்துக்கு மாறாக அதிக வேகத்துடனும், உயரமாகவும் வீசியது.

கடல் அலை சீற்றத்தால் தனுஷ் கோடி, மண்டபம், பாம்பன், தங் கச்சிமடம், சேதுக்கரை, சின்ன ஏர்வாடி, கீழக்கரை ஆகிய பகுதி களில் உள்ள கடலோரக் கிராம மக்கள் அருகே உள்ள புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை மீண்டும் வீடுகளுக்குச் சென்றனர்.

திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரையில் சில நாட்களாகக் கடல் அலையானது வழக்கத்துக்கு மாறாக பல அடி உயரம் கூடுதலாக சீற்றத்துடன் இருந்தது. மேலும் புரெவி புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்தால் கடலோரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்துக்குப் பனை, தென்னை மரங்கள் வேருடன் பெயர்ந்துள்ளன.

கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் அலைகள் சீற்றமின்றி அமைதியாகக் காணப்படுகிறது.

அங்குள்ள மீனவர்கள் கூறியதாவது:

கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக சீற்றமின்றி அமைதியாக இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சேதுக்கரைப் பகுதியில் கடல் அமைதியாக இருந்தால், பின்னர் அதிக சீற்றத்துடன் கடல் இருக்கும். அதனால் அச்சமாக உள்ளது.

எனவே பாதுகாப்பு கருதி நாட்டுப் படகுகள், வல்லங் களை கடலில் இருந்து கரைப் பகுதியில் ஏற்றி வைத்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in