Published : 07 Dec 2020 03:16 AM
Last Updated : 07 Dec 2020 03:16 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 2 அணைகள், 114 ஏரிகள் முழுமையாக நிரம்பின: பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 2 அணைகள், 114 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்க கடலில் உருவான ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட் களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியில் அதிக பட்சமாக 10.2 மி.மீ., மழையளவும், ராணிப் பேட்டை மாவட்டம், அம்மூரில் அதிகபட்சமாக 26.4 மி.மீ., மழையளவும், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வடபுதுப்பட்டு பகுதியில் 13.6 மி.மீ., மழையளவு நேற்று பதிவானது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினமும் மற்றும் நேற்று காலையும் பரவலாக மழை பெய்தது. வேலூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று அதிகாலை காட்பாடி, வேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை நீடித்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டத் தில் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 அணை களில் குடியாத்தம் மோர்தானா அணையும், திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மோர்தானா அணையின் நீர்வரத்து 708 கன அடியாக உள்ளது. அதே அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. ஆண்டியப்பனூர் அணையின் நீர்வரத்து 43.83 கன அடியாக உள்ளது. அதே அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. கே.வி.குப்பம் அடுத்த ராஜாதோப்பு அணையில் 80 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது 3.76 கன அடியாக உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் மொத்தம் 519 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக பாலாறு, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள 101 ஏரிகளில் நேற்று காலை நிலவரப்படி 28 ஏரிகள் முழுமை யாக நிரம்பியுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 82 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 4 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அதேபோல, 3 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடியாத்தம் எர்த்தாங்கல் ஏரியில் இருந்து நேற்று காலை முதல் தண்ணீர் வெளியேறி வருகிறது. அதேபோல், குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர், செட்டிக்குப்பம் ஏரிக்கு நேற்று திருப்பிவிடப்பட்டது.

வேலூர் மாநகரையொட்டியுள்ள சதுப்பேரி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 25 சதவீதமும், தொரப்பாடி ஏரியில் 40 சதவீதமும் தண்ணீர் நிரம்பியுள்ளன. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: (மில்லி மீட்டரில்)

வேலூர் 10.2., குடியாத்தம் 6.4., காட்பாடி 5.2., மேலாலத்தூர் 7.4., பொன்னை 4.4., ராஜாத்தோப்பு அணைப்பகுதி 3, அரக்கோணம் 9.4., ஆற்காடு 12.0., காவேரிப்பாக் கம் 5.0., சோளிங்கர் 10, வாலா ஜா 14.8., அம்மூர் 26.4., கலவை 16.4., ஆலங்காயம் 4.8., ஆம்பூர் 9, வடபுதுப்பட்டு 13.6., கேத்தாண் டப்பட்டி 3, திருப்பத்தூர் 1, வாணியம்பாடி 5.3 மி.மீட்டர் அளவுக்கு மழையளவு பதிவாகியிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x