தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளதால், அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வடமாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த, சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கடந்த 4 நாட்களாக அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் வரும் 8-ம் தேதி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தபால் நிலையங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து விவசாயிகள் சங்கத்தினர் சிலர் டெல்லி சென்று, அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். டெல்லி செல்லவுள்ள அந்தக் குழுவினர் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் இருப்பதால் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in