Published : 06 Dec 2020 03:18 AM
Last Updated : 06 Dec 2020 03:18 AM

குண்டும் குழியுமான வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலை; சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகும் மாவட்ட நிர்வாகம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் விளக்கம்

திருப்பத்தூர்-வாணியம்பாடி இடையிலான சாலை சமூகவலை தளங்களில் மீம்ஸ்களால் கேலிக்குள்ளாகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தையும், ஆட்சியாளர் களையும் கேலிக்குள்ளாகியுள்ள சாலை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் பிரிக் கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், முதலாம் ஆண்டு பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளனர். புதிய மாவட்டத்தின் ஆட்சியராக சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் விஜயகுமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரால் பாராட்டப் பட்ட நிலையில், நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த நெக்னா மலைக்கு தற்காலிக தீர்வையும் கண்டனர். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், வாணியம்பாடி-திருப்பத்தூர் இடையிலான சாலைக்கு மட்டும் எப்போது தீர்வு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பளபளக்கும் சாலையில் பயணிப்பவர்கள் வாணி யம்பாடியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் பயணித்தால் நேர் எதிர் பயண அனுபவத்தை பெறுகின் றனர். மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூர் இருக்கும் நிலையில் வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் சாலை வழியாக வாகனங்களில் திருப்பத்தூர் செல்லவே தயங்குகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வேகமாக செல்ல முடியாத நிலையில் இருப்பதால் குண்டும், குழியுமாக இருக்கும் பள்ளங்களையாவது சரி செய்யுங்கள் என்ற கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கவில்லை.

மீம்ஸ்களால் கேலி

புதிய மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் வாணியம்பாடி-திருப்பத்தூர் இடையிலான மோசமான சாலை குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தின் முகநூல் பக்கங்கள், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாவட்ட நிர்வாகத்தையும் ஆட்சி யாளர்களையும் நகைச்சுவை மீம்ஸ்களால் வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சூரரைப்போற்று திரைப்படத்தில் வரும் காட்சிகளில் ‘திருப்பத்தூர் மாவட்ட மக்கள்: திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையை சீக்கிரம் சீரமைத்து தாங்க...’ இதற்கு பதிலாக ‘செவிடன் காதில் சங்கு ஊதுன மாதிரி...’ வடிவேலுவின் வீரபாகு காட்சியில் ‘பேசாம ஒரு பிளைட்டை திருப்பத்தூர்-வாணியம்பாடி இடையே விடலாம்னு இருக்கோம். இவனுங்க சாலை போடுற மாதிரி தெரியல’ மீம்ஸ்கள், நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் வரும் காட்சிகளில், ‘இந்த சாலை இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போதோ’, கைதி படத்தில் வரும் காட்சிகளில் ‘எங்க ஊரு சாலைகள் தான் குண்டும் குழியுமா இருக்கும், ஆனா எங்க மக்களின் மனசு என்னைக்கும் தங்கமா இருக் கும்’ என்ற மீம்ஸ்கள் பலராலும் ரசிக்கப்பட்டது.

ஆட்சியர் விளக்கம்

45 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்க முடியாத காரணம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கேட்டபோது, ‘‘மாநில நெடுஞ்சாலையாக இருந்திருந்தால் இந்த சாலைக்குஎப்பொழுதோ முடிவு ஏற்பட்டிருக் கும். தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு டெண்டர் ரத்தானது. கடும் முயற்சிக்குப் பிறகு சமீபத்தில் தான் சாலைக்கான டெண்டர் விடப் பட்டுள்ளது. மக்களின் கோபத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகி றது. எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடமும் பேசியுள்ளோம்.

அடுத்த சில நாட்களில் சாலை பணிகள் எந்த நேரமும் தொடங்க உள்ளது. அவர்களும் நிலைமையை புரிந்துகொண்டு மூன்று குழுக்களாக பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த சாலையில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளது. மழை முடிந்ததும் குண்டும் குழியுமான சாலைகள் கண்டிப்பாக சரி செய்யப்படும். சமூகவலைதளங்களில் வரும் மீம்ஸ்களும் எங்கள் கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறோம்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x