Published : 05 Dec 2020 09:02 PM
Last Updated : 05 Dec 2020 09:02 PM

மதுரையில் ரூ.30 கோடியில் சர்வதேசத் தரத்தில் மண்டலப் புற்றுநோய் மையம் தொடக்கம்: தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்

மதுரை

மதுரை அருகே பாலரெங்காபுரத்தில் சர்வதேசத் தரத்தில் ரூ.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மண்டலப் புற்றுநோய் மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. இனித் தென் மாவட்ட மக்கள் புற்றுநோயை எளிதில் கண்டறிந்து எளிமையாக சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென் தமிழகத்திலேயே மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே புற்றுநோய் சிகிச்சைக்குத் தனி சிகிச்சைப்பிரிவு செயல்படுகின்றது. இங்கு கன்னியாகுமரி முதல் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்துகூட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மெமோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முதல் சமீபத்தில் வந்த பெட் ஸ்கேன் வரை புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறிய நவீனக் கருவிகள் இங்கு உள்ளன. பெட் ஸ்கேன் மூலம் நோயாளியின் உடலில் இருக்கும் கட்டி, புற்றுநோய்க் கட்டியா, சாதாரணக் கட்டியா என்பதை அதில் உள்ள செல் வகையைப் பொறுத்து ஆராயக்கூடிய வசதிகள் உள்ளன.

அதேபோல கதிரியக்கச் சிகிச்சைக்குத் தனிப்பிரிவு உள்ளது. தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஆனாலும், புற்றுநோய் சிகிச்சைக்கு தனி மருத்துவமனையும், அதற்கான ஆய்வகமும் அமைய வேண்டும என்று தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மதுரை அருகே பாலரெங்காபுரத்தில் ரூ.30 கோடியில் மண்டல புற்றுநோய் மையம் சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டது. கடந்த 8 மாதத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்குத் தயராக இருந்தது. ஆனால், கரோனா ஊரடங்கால் அதன் செயல்பாடு தடைப்பட்டுக் கிடந்தது. நேற்று மதுரை வந்த முதல்வர் கே.பழனிசாமி, இந்த மண்டலப் புற்றுநோய் மையத்தைத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி கூறும்போது, ''இந்த மண்டலப் புற்றுநோய் மையத்தில் சர்வதேசத் தரத்தில் உள்ள மருத்துவ உபகரணங்களைக் கொண்டு ராஜாஜி மருத்துவமனை கதிர்வீச்சுத் துறை மருத்துவ நிபுணர்கள், நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்க உள்ளனர். இந்த மையம் சுமார் ரூ.30 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கருவிகள் அனைத்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) வழியாக வழங்கப்பட்டுள்ளன.

அனைத்துப் புற்று நோயாளிகளுக்கும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மருத்துவ ஆய்வுகள், சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. இந்த மண்டலப் புற்றுநோய் மையம், தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாகும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x