Last Updated : 05 Dec, 2020 08:33 PM

 

Published : 05 Dec 2020 08:33 PM
Last Updated : 05 Dec 2020 08:33 PM

தமிழகத்தில் 35 கோயில்களில் சித்த மருந்தகம் அமைக்கப்படும்: அரசு தகவல்

தமிழகத்தில் மேலும் 30 கோயில்களில் சித்த மருந்தகம் திறக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய மருத்துவ நலக் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் மருத்துவர் ஜெயவெங்கடேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் வரும் 49 கோயில்களில் சித்த மருத்துவமனைகள் தொடங்கப்படும் எனத் தமிழக அரசு 1970-ல் அரசாணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை 6 கோயில்களில் மட்டுமே சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அரசாணை அடிப்படையில் அனைத்து கோவில்களிலும் சித்த மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் முருகன் கோவில்கள் உட்பட 5 கோயில்களில் சித்த மருத்தகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சித்த மருந்தகம் அமைக்க மேலும் 30 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். இதையடுத்து சித்த மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கோயில்களில் பட்டியலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x