

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்தது. நிவர், புரெவி புயல் காரணமாகவும் போதிய மழைப்பொழிவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கன மழையாக பெய்யாமல் விடிய விடிய மிதமான அளவில் மழை பெய்தது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 70 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 49.40 மி.மீ., சங்கரன்கோவிலில் 48 மி.மீ., செங்கோட்டையில் 47 மி.மீ., சிவகிரியில் 40 மி.மீ., குண்டாறு அணையில் 39 மி.மீ., அடவிநயினார் அணையில் 31 மி.மீ., ராமநதி அணையில் 30 மி.மீ., ஆய்க்குடியில் 24.60 மி.மீ., கடனாநதி அணையில் 22 மி.மீ. மழை பதிவானது.
கடனா நதி அணை நீர்மட்டம் அரையடி உயர்ந்து 79 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் சிறிது உயர்ந்து 73.25 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 68.24 அடியாக இருந்தது.
குண்டாறு அணை தொடந்து முழு கொள்ளளவில் உள்ளது. அடவிநயினார் அணையில் நீர்மட்டம் அதிகரிக்காமல் 90.50 அடியாக இருந்தது.
மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.