Published : 05 Dec 2020 07:41 AM
Last Updated : 05 Dec 2020 07:41 AM

வேளாண் சட்டங்கள் குறித்து டிச.8 முதல் பாஜக பிரச்சாரம்: கட்சித் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து வரும் 8-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியது. இடைத் தரகர்களே இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, விரும்பிய நபர்களிடம் விற்பனை செய்ய இந்த சட்டங்கள் வழி செய்கின்றன. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் தூண்டுதலால் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

வேளாண் சட்டங்களை வைத்து தமிழக மக்களை திசைதிருப்ப திமுக ஏற்கெனவே முயற்சித்து தோல்வி அடைந்தது. தற்போது டெல்லி போராட்டத்தை வைத்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்தும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விவசாயிகள், பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் டிச.8 முதல் பாஜக சார்பில் மக்கள் தொடர்பு இயக்கம் நடைபெற உள்ளது. பாஜகநிர்வாகிகள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்து இந்த சட்டங்கள் குறித்து எடுத்துரைப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அந்த வகையில், கட்சி தொடங்க ரஜினிக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் சந்தேகம் இல்லை. கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும். ரஜினி கட்சியுடன் கூட்டணியா என்பதை தலைமைதான் முடிவு செய்யும்.
திருச்செந்தூரில் வரும் 7-ம் தேதி நடைபெறும் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x