Published : 05 Dec 2020 07:06 AM
Last Updated : 05 Dec 2020 07:06 AM

‘நிவர்’ புயல் பாதிப்பை கணக்கிட 7 பேர் கொண்ட மத்திய குழு இன்று தமிழகம் வருகை: பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை முதல் ஆய்வு 

‘நிவர்’ புயல் பாதிப்பைக் கணக்கிட 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். 2 குழுக்களாகப் பிரிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை முதல் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

வங்கக் கடலில் உருவான ‘நிவர்’புயல் கடந்த நவ.25-ம் தேதி கடலூர்அருகில் கரையைக் கடந்தது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக புதுக்கோட்டை முதல்சென்னை வரையிலான கடலோரப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மழைநீரால் ஏராளமான இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ‘நிவர்’ புயல் உருவான போதே, முதல்வர் பழனிசாமியைத் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர், தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் பயிர் பாதிப்பைஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டது.

அதன்படி, மத்திய குழுவினர் கடந்த வாரமே தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால், ‘புரெவி’ புயல்காரணமாக வருகை தள்ளிப்
போனது. இந்நிலையில், தற்போது ‘புரெவி’ புயல் வலுவிழந்து தமிழகம்முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று மத்திய குழுவினர் தமிழகம் வருகின்றனர்.

இக் குழுவில், ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் துறையின் எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குநர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துத் துறை மண்டல அதிகாரி ரணன்ஜெய் சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித் துறை இயக்குநர்களில் ஒருவரான பர்தெண்டு குமார் சிங், மத்திய மின்சார குழுமத்தின் துணை இயக்குநர் ஓ.பி.சுமன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் தர்மவீர் ஜா, மத்திய மீன்வள ஆணையர் பால் பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குநர் ஜெ.ஹர்ஷா ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இன்று பிற்பகல் சென்னை வரும் குழுவினர், தலைமைச் செயலகத்தில் மாலை 3 மணிக்கு முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலர் கே.சண்முகம் ஆகியோரை சந்திக்கின்றனர். தொடர்ந்து, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டியுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னையில் இன்று இரவு தங்கும் அவர்கள் நாளை, 2 குழுவாகப்பிரிந்து ஒரு குழுவினர், தமிழகவேளாண் துறை செயலர் ககன்தீப்
சிங் பேடியின் வழிகாட்டுதலில், தென்சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளைப் பார்வையிட்டு அதன் பின், அன்று மாலை புதுச்சேரி செல்கின்றனர். டிச.7-ம் தேதி பிற்பகல் வரை புதுச்சேரியில் பாதிப்புகளை அளவிடுகின்றனர். அதன்பின் மீண்டும் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை பார்வையிட்டு இரவில் சென்னை திரும்புகின்றனர்.

மற்றொரு குழுவினர், பொதுப்பணித் துறை செயலர் க.மணிவாசன் வழிகாட்டுதல்படி, நாளைகாலை வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைப் பார்வையிட்டு வேலூர் செல்கின்றனர்.

டிச.7-ம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டு அன்று மாலை சென்னை திரும்புகின்றனர். மறு
நாள் (டிச.8)சென்னையில் தமிழக அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோருடன் மீண்டும் ஆலோசனை நடத்திவிட்டு, அன்று மாலை டெல்லி திரும்புகின்றனர்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பாதிப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x