Published : 04 Dec 2020 09:24 PM
Last Updated : 04 Dec 2020 09:24 PM

வலுவிழந்த புரெவி புயல் : ராமேசுவரம் கடலோரப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை; பாம்பன், மண்டபம் பகுதிகளில் 100 படகுகள் சேதம்

புரெவி புயல் இலங்கையை கடந்து தமிழக கடற்பகுதிக்கு வந்தப் பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

இதனால் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததுடன் பாம்பன், மண்டபம் பகுதிகளில் வீசிய காற்றினால் கடலில் நிறுத்தி வைத்திருந்த சுமார் 100 படகுகள் சிக்கி சேதமடைந்தன.

‘நிவர்’ புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது கடந்த டிசம்பர் 1-ம் தேதி புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டது.

இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த புரெவி புயல் புதன்கிழமை இரவு இலங்கையில் திரிகோணமலை பகுதியில் தாக்கி கரையை கடந்தது. தொடர்ந்து புரெவி புயல் மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு நகர்ந்தது.

முதலில் புரெவி புயல் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடந்து பின்னர் அரபிக்கடலுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இலங்கையைக் கடந்த புரெவிப் புயல் சற்று திசை மாறி வடமேற்கு நோக்கி பயணித்து வியாழக்கிழமை காலையிலிருந்து பாம்பன் அருகே நிலை கொண்டிருந்தது.

வியாழக்கிழமை இரவு புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு பகுதியில் 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டது.

இதனால் பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 7-ம் எண் புயல் கூண்டு இறக்கப்பட்டு 3-ம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் கடற்பகுதியில் கனமழை பெய்தது.

முன்னதாக வியாழக்கிழமை இரவு பாம்பன் மற்றும் மண்டபம் அதனைச் சுற்றியுள்ளப் பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியது.

இந்த காற்றினால் பாம்பன் குந்துக்கால் மற்றும் மண்டபம் மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு, பைபர் மற்றும் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் சேதமடைந்துடன் சூறாவளி காற்றின் காரணமாக பல படகுகள் கரை ஒதுங்கின.

வெள்ளிக்கிழமை சூறைவளிக் காற்று நின்ற பின்னர் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக தனித்தனியாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சூறாவளிக் காற்றினால் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் சுமார் 100 படகுகள் சேதடைந்துள்ளன. படகுகளை சீரமைக்க தலா ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சூறைக்காற்றினால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து ராமேசுவரம் தீவு முழுவதும் மூன்றாவது நாளாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் மின்வாரியத் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை விவரம்:

அதிகப்பட்சமாக ராமேசுவரம் 204 மி.மீ, தங்கச்சிமடம் 88 மி,மீ, பாம்பன் 77 மி.மீ, தொண்டி 66 மி.மீ, தீர்த்தாண்டதானம் 62 மி.மீ, திருவாடனை 61 மி.மீ, மண்டபம் 58 மி.மீ அளவும் மழை பெய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x