

தமிழக முதல்வர் வருகையை ஒட்டி அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டு குடிநீர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மதுரை, சிவகங்கை மாவட்டத்துக்கு நேற்று வந்தார். அவரை வரவேற்று இரு மாவட்டங்களிலும் அதிமுகவினர் பேனர் வைத்திருந்தனர்.
இதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று முறையிட்டார்.
காணொலி காட்சி வழியாக டிராக் ராமசாமி பேசும்போது, முதல்வர் வருகையை ஒட்டி மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து விதிமீறல் பேனர், கட்அவுட்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றார்.
மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.