

அரசு விழாக்களில் மக்களவை உறுப்பினருக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''கோவை மக்களவை உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் உள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் என்பதால், தொடர்ந்து அரசு விழாக்களுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்படுகிறார். இன்னும் சொல்லப் போனால் அரசு விழாவிற்கான அழைப்பிதழ்களே அடிப்பதில்லை. அரசு சார்பில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டால் இதில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.யின் பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே அழைப்பிதழ் அடிக்கப்படுவதில்லையோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
ஏற்கெனவே சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவழைத்து, அவிநாசி சாலை மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் நேற்று (டிச.3) உள்ளாட்சித்துறை அமைச்சரைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு அடிக்கல் விழா அரசு சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, அதிமுகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கிற காரணத்திற்கான பாஜகவின் முன்னாள் எம்.பி. அழைக்கப்படுவதும், அந்நிகழ்வில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவதும் அது அரசு விழாவா அல்லது இவர்களின் கூட்டணிக் கட்சிகளின் அணிவகுப்பு விழாவா என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் சமீப காலமாக அரசு விழாக்கள் அனைத்தையும் அதிமுக விழாவைப் போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமே முன்னின்று செய்கிறதோ என்கிற ஐயம் எழுகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியை அரசு விழாக்களுக்கு அழைக்காமல் இருப்பது என்பது கோவை மாவட்ட மக்களின் எண்ணத்திற்கு விரோதமானது என்பதை கோவை மாவட்ட ஆட்சியருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதுபோன்ற செயல்கள் இனிமேலும் நடைபெறாமல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.