Published : 04 Dec 2020 01:51 PM
Last Updated : 04 Dec 2020 01:51 PM

புரெவி புயல் வலுவிழந்தது; தெற்கு கேரளப் பகுதி நோக்கி நகரும்; 15 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மேகக்கூட்டம் திரளுவதால் 2 நாளைக்கு மழைக்கும் சில நேரம் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மாலை வரை அதே பகுதியில் நிலவக்கூடும். இது மேலும் பின்னர் தொடர்ந்து வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக ராமநாதபுரம் வழியாக மேற்கு தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து நாளை மாலை தெற்கு கேரளப் பகுதியை அடையக்கூடும்.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழையும், சிதம்பரத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பெய்த அளவில் 11 இடங்களில் அதிகனமழையும், 20 இடங்களில் மிக கனமழையும், சுமார் 50 இடங்களுக்கு மேல் கனமழையும் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த அக்.01 முதல் இன்று வரையான காலகட்டத்தில் இயல்பு அளவு 373 மி.மீ.

இந்தக் காலகட்டத்தில் பெய்த மழை அளவு 364 மி.மீ. இது இயல்பை விட 2 சதவீதம் குறைவு. நேற்றுவரை இயல்பைவிட 16 சதவீதம் குறைவாக இருந்த வடகிழக்குப் பருவமழை இன்று 2 சதவீதம் குறைவாக உள்ளது. நமக்கு நேற்று 14 சதவீதம் மழை கிடைத்துள்ளது.

அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் வேலூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும், வடமாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் நாளை காலை வரை இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்துவரும் 2 தினங்களுக்கு மழை தொடரும். சில பகுதிகளில் கனமழையாக இருக்கும். இந்த நிலை ராமநாதபுரம் பகுதியில் தொடர்ந்து இருப்பதால் தொடர்ந்து கடற்பகுதியிலிருந்து மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருவதால் மழை நீடிக்கும்.

அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி எதுவும் இல்லை. இப்போதைக்கு இதுதான் நிலை. இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தாலும் மேலே வர வாய்ப்பில்லை”.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x