Published : 04 Dec 2020 11:46 AM
Last Updated : 04 Dec 2020 11:46 AM

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

தமிழகத்தில் ஆன்மிகம் எடுபடும். ஆனால் ஆன்மிக அரசியல் எடுபடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார். ராகுல்காந்தியும், மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டில் இருக்கும் தீய சக்திகளை எதிர்த்து ஒரு புதிய விடியலை உருவாக்க தயாராக இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆன்மிகம் எடுபடும். ஆனால் ஆன்மிக அரசியல் எடுபடாது. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நேற்று இல்லை என்றார். இன்று ஆமாம் என்றார். நாளை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் ராயபுரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக மக்களுடன் பயணித்து வருகிறது. எங்களுக்கென்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாக்கு வங்கி உள்ளன. இந்த வாக்கு வங்கி எந்த நிலையிலும் மாறாது. எனவே எந்த கட்சி வேண்டுமானாலும் வரட்டும். நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். 2021-ல் தேர்தலை சந்தித்து நாங்கள் ஆட்சியமைப்போம். ஊழல் என்று ரஜினி சொல்வது திமுகவைத்தான். அதிமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x