Last Updated : 04 Dec, 2020 11:11 AM

 

Published : 04 Dec 2020 11:11 AM
Last Updated : 04 Dec 2020 11:11 AM

நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை; வீராணம் ஏரியின் பிரதான வடிகால் மதகு வெள்ளியங்கால் ஓடை திறப்பு: 20 கிராமங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம்

வீராணம் ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடலூர்

வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கிராமங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி ஆகும். இதன் முழுக் கொள்ளளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

தற்போது கீழணையில் இருந்து ஏரிக்கு விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காட்டாறு மூலம் ஏரிக்கு விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 46.30 அடி உள்ளது.

இந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியின் பிரதான மதகான வெள்ளியங்கால் ஓடை வழியாக விநாடிக்கு 1,500 கன அடியும், விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக வெள்ளாற்றில் விநாடிக்கு 1,450 கன அடியும் வெளியேற்றி வருகின்றனர். சென்னைக்கு விநாடிக்கு 69 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியாங்கால் ஓடை திறக்கப்பட்டதால் திருநாரையூர், சர்வராஜன்பேட்டை, எள்ளேரி கிழக்கு, நத்திமங்கலம், கீழவன்னீயூர், கீழக்கரை, நடுதிட்டு உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபயாம் ஏற்பட்டுள்ளது. சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இப்பகுதிகளை வருவாய்த் துறையினர் பார்வையிட்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருன்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34 செ.மீ., லால்பேட்டையில் 29.5 செ.மீ., காட்டுமன்னார் கோவிலில் 25.34 செ.மீ.,சேத்தியாத்தோப்பில் 20.62 செ.மீ., ஸ்ரீமுஷ்ணத்தில் 12.22 செ.மீ., கீழணையில் 19.8 செ.மீ. மழை பெய்துள்ளது.

சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவிச் செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி மற்றும் உதவிப் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் கொண்ட குழுவினர் வீராணம் ஏரிக்கரைகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x