Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மத்திய அரசின் பங்கை உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் பள்ளிக்கு பிறகான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித்தொகை செலவினம் அதிகரித்துள்ளதால், அதில், மத்திய அரசின் பங்கை 60 சதவீதமாக உயர்த்தி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான நிதி விடுவிக்கும்விஷயம் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

12-வது ஐந்தாண்டு (2012-17) திட்டத்துடன் 5 ஆண்டு திட்டங்கள் கைவிடப்பட்ட பின்னரும், மாநிலத்தின் பொறுப்புடைமை தொகையைமாற்றி அமைக்கும் முந்தைய நடைமுறை தொடர்ந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தின் பொறுப்புடைமை தொகை 2012-13-ல் ரூ.353 கோடியே 55 லட்சமாக இருந்தது. ஆனால், 2017-18-ம் ஆண்டில் இருந்து ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், இந்தத் திட்டத்தின்கீழ் மாநில அரசு 2017-18-ம் ஆண்டில் ரூ.1,689 கோடியே 34 லட்சம், 2018-19-ல் 1,910 கோடியே 19 லட்சம் மற்றும் 2019-20-ம் ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 5 கோடியே 70 லட்சத்தை செலவழித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் பங்காக முறையே ரூ.162 கோடியே 88 லட்சம், ரூ.383 கோடியே 73 லட்சம் மற்றும் ரூ.479 கோடியே 24 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த 2020-21-ம் ஆண்டில், தமிழகத்தில் இத்திட்டத்துக்காக ரூ.2 ஆயிரத்து 110 கோடியே 90 லட்சம்செலவழிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசின் பங்காக ரூ.584 கோடியே 44 லட்சம் மட்டுமேபெறும் நிலை உள்ளது. இது மாநிலஅரசுக்கு கடும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு மாநில அரசு தனது சொந்தவருவாயில் இருந்து அதிக நிதியை செலவழிக்கும் நிலை ஏற்படும்.

எனவே, மத்திய அரசின் இதரதிட்டங்களைப்போல், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தையும் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் பங்குஎன்ற அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக கடந்த2018, மே 30, ஜூன் 14-ம் தேதிகளிலும், 2019 ஜன.27-ம் தேதியும் தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் வழங்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய சமூக நீதித் துறைக்கு உத்தரவுகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x