

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் திருச்சி பதிப்பு செய்திப் பிரிவு பொறுப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.தனராஜ்(52), மாரடைப்பால் நேற்று காலமானார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி-லட்சுமி தம்பதியரின் மூத்த மகன் எஸ்.தனராஜ். தினமணி நாளிதழில் முசிறியில் 1994-ல் பகுதிநேர செய்தியாளராக பணியைத் தொடங்கிய இவர், தொடர்ந்து தினபூமி நாளிதழின் திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர், தினமணி, தினகரன் நாளிதழ்களில் திருச்சி பதிப்பின் செய்திப் பிரிவிலும் பணிபுரிந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கியது முதல் திருச்சி பதிப்பின் செய்திப் பிரிவு பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனராஜ், மாலையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணா என்ற பிளஸ் 2 படிக்கும் மகனும் உள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த அப்பணநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (டிச.4) இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.