Last Updated : 29 May, 2014 06:30 PM

 

Published : 29 May 2014 06:30 PM
Last Updated : 29 May 2014 06:30 PM

சூரியசக்தியில் இயங்கும் மாற்றுத்திறனாளிக்கான ஸ்மார்ட் வாகனம்: பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

சூரியசக்தியில் இயங்கும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் வாகனத்தை பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மின்னியல், மின்னணுவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் எம்.கார்த்திகேயன், பி.சந்திரமோகன், பி.பிரதாப், பி.விக்னேஷ்வரன் ஆகியோர் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.ரமேஷ் ஆலோசனைப்படி மாற்றுத்திறனாளிகள் எளிதாக இயக்கி பயன்படுத்தக்கூடிய வகையில் சூரியசக்தி மூலம் இயங்கும் ஸ்மார்ட் வாகனம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியது: மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தற்போதுள்ள இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களை இயக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர். மனித ஆற்றலை அவர்கள் அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, அவர்கள் எளிதாகக் கையாளும் வகையில் சூரியசக்தியில் இயங்கும் ஒரு ஸ்மார்ட் வாகனத்தை தயாரிக்க திட்டமிட்டோம்.

4 சக்கரங்கள் கொண்ட இந்த வாகனம் 35 கிலோ எடைகொண்டது. சுமார் 200 கிலோ வரை எடையை தாங்கிச்செல்லும் திறன் கொண்டது. மிகக்குறைந்த அளவு மின்சக்தியை ஏற்கும் 12 வோல்ட் பேட்டரிகள் மூலம் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. மழை காலங்களில் பயன்படுத்தப்படும் வைப்பர் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் மேற்பரப்பில் சூரியசக்தியை மின் ஆற்றலாக மாற்றும் 50 வோல்ட் திறன்கொண்ட பேனல் பொருத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மற்ற வாகனங்களைப்போல் ஸ்டியரிங் இல்லை. முன்பின்னாக இயக்குவதற்கும், வலதுஇடது புறமாக வாகனத்தைத் திருப்புவதற்கும் முற்றிலும் மைக்ரோ கண்ட்ரோலர் உதவியுடன் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய இந்த வாகனம் ஒரு மணி நேரத்துக்கு 18 முதல் 20 கி.மீ. வரை செல்லும். 30 டிகிரி ஏற்றத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும். இரவு நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்தியும் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். இந்த வாகனம் தயாரிப்பதற்கான மொத்த செலவு ரூ.16 ஆயிரம் மட்டுமே.

இந்த வாகனத்தை மாற்றுத் திறனாளிகள், முதியோர்களால் எளிதாகப் பயன்படுத்த முடியும். விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், வணிக வளாகங்கள் மற்றும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தலாம். சமமான தளங்களிலும், சாய்வு தளங்களிலும் மிகுந்த நிலைப்பாட்டுடன் இயக்கலாம். மேலும், சுற்றுப்புறத்துக்கு மாசு ஏற்படாத வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

ஸ்மார்ட் வாகனத்தைத் தயாரித்த மாணவர்களை கல்லூரித் தாளாளர் ஆர்.சோலைசாமி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x