Published : 03 Dec 2020 03:57 PM
Last Updated : 03 Dec 2020 03:57 PM

கன்னியாகுமரிக்கு 370 கி.மீ தொலைவில் புரெவி புயல்: தென் மாவட்டங்களில் கனமழை

சென்னை

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி நிலவரப்படி வடக்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி நிலவரப்படி வடக்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது இலங்கையின் மன்னாரில் இருந்து வட கிழக்கு திசையில் 30 கி.மீ. தொலைவிலும்.

பாம்பனில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 110 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு வட கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடாவில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நிலைகொள்ளும்.

இதன் காரணமாக இன்று (03.12.20200 தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்யும்.

நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.

கடலூர், வேலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நவ. 04 தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

வேதாரண்யம் 20 செ.மீ, காரைக்கால் 16 செ.மீ, தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 15 செ.மீ, நாகப்பட்டினம் 14 செ.மீ, திருத்துறைப்பூண்டி(திருவாரூர்) 13 செ.மீ, மயிலாடுதுறை, ராமேஸ்வரம் தலா 12 செ.மீ, முதுகுளத்தூர் (ராமநாதபுரம் ) 11 செ.மீ, சீர்காழி (நாகப்பட்டினம்), குடவாசல் (திருவாரூர்) , அதிரமப்பட்டினம் (தஞ்சாவூர்), தலா 10 செ.மீ, திருவாரூர், தாம்பரம், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) தலா 9 செ.மீ, மரக்காணம் (விழுப்புரம்), பாம்பன் (ராமநாதபுரம்), திருவிடைமருதூர் , திருக்கழுக்குன்றம் , புதுச்சேரி, வலங்கைமான் (திருவாரூர்) தலா 8 செ.மீ, கொள்ளிடம், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), வானுர் (விழுப்புரம்), தரமணி (சென்னை), பரங்கிப்பேட்டை (கடலூர்), பாபநாசம் (தஞ்சாவூர்), கடலூர், நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 7 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

டிசம்பர் 03 தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு இன்று மாலை வரை 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு கேரள கடலோர பகுதி சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல்,, லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 04 தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு இன்று மாலை வரை 70 முதல் 80 கி.மீ வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு கேரள கடலோர பகுதி புயல் காற்று மணிக்கு இன்று மாலை வரை 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல்,, லட்சத்தச்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் அலை முன்னறிவிப்பு:

வடதமிழக கடலோர பகுதிகளில் பாலிமர் முதல் பழவேற்காடு வரை நவ.04 இரவு 11:30 மணி வரை கடல் அலை 2.0 முதல் 4.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நவ.04 இரவு 11:30 மணி வரை கடல் அலை 2.0 முதல் 4.5 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x