

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 118 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்த முத்து மகன் மாரி (49), இவரது மகன் செல்வம் (23) மற்றும் உறவினரான ராமசாமி மகன் சோமு (எ) சண்முகசுந்தரம் (43) ஆகிய மூவரையும் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கடந்த 03.11.2020 அன்று ஆழ்வாத்திருநகரி போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் எஸ்பிக்கு அறிக்கை சமர்பித்தார்.
இதேபோல் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் எபனேசர் பிரசாத் (எ) பிரசாத் (30), விஜயராஜ் மகன் அந்தோணி வினோத் (25), தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாரிக்குமார் மகன் ஆனந்த் (27) மற்றும் தாளமுத்துநகர், தாய் நகரை சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் (எ) கட்டக்காளி (37) ஆகிய 4 பேரையும் ஒரு கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸார் கடந்த கடந்த 31.10.2020 அன்று கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் எஸ்பிக்கு அறிக்கை அளித்தார்.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் ஆகியோரது அறிக்கையின் அடிப்படையில் 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்று மாரி, செல்வம், சோமு என்ற சண்முகசுந்தரம், எனேசர் பிரசாத் என்ற பிரசாத், அந்தோணி வினோத் என்ற வினோத், ஆனந்த், காளிராஜ் என்ற கட்டகாளி ஆகிய 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் 7 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உள்ளிட்ட 118 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.