

சென்னையில் கடந்த 8-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் காமராஜ், அதில் பயணித்த லதா ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, சேப்பாக்கம், வெலிங்டன் ஆசிரியர் கல்லூரி அருகே காமராஜர் சாலையில் 8.10.2015 அன்று ஆட்டோவும், மாநகர அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் சம்பவ இடத்திலேயும், ஆட்டோவில் பயணம் செய்த பட்டினபாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலும்
உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்த காமராஜ் மற்றும் லதா ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாலை விபத்தில் உயிரிழந்த காமராஜ் மற்றும் லதா ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்,