Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டத்துக்கு தயாராகும் போக்குவரத்து ஊழியர்கள்: நிர்வாகங்களுக்கு இன்று நோட்டீஸ் அளிப்பு

புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் விரைவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கான அறிவிப்பை, அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இன்று வழங்கவுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி 14-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில்செலுத்த வேண்டும், ஓய்வு பெற்ற உடனேயே பணப்பலன்களை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் நேற்று கூறியதாவது:

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து இன்னும் பேச்சு தொடங்கப்படவில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட நிலுவைகள் உள்ளன.இதேபோல், போனஸ் தொகை குறைக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் இன்று வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கவுள்ளோம்.

வரும் 7-ம் தேதி முதல் மண்டல அலுவலகங்களில் வாயிற்கூட்டங்களை நடத்தவுள்ளோம். டிச. 11 மற்றும் 12 தேதிகளில் அரசியல் கட்சிகள், மற்ற தொழிற்சங்கங்களை சந்தித்து ஆதரவு கேட்போம். மக்களை சந்தித்து பேசவுள்ளோம். வரும் 17-ம் தேதிக்குள் கோரிக்கைகளின் மீது உரிய தீர்வு காணப்படாவிட்டால் டிசம்பர் 17 அன்றோ அல்லது 6 வாரங்களுக்கு உள்ளாகவோ வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x