Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

ஸ்டெர்லைட்டை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க முடியாது: ஆலையின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி கோரிய மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் காரணமாக அந்த ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது.

அதன்பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் பேர் நேரடியாகவும், 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். உள்நாட்டு தாமிர தேவையில் 36 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் வெளிநாடுகளிலிருந்து தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஆலையை தற்காலிகமாக குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு திறந்து இயக்க அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் தொழில்நுட்ப ரீதியாக இயந்திரங்களை பாதுகாக்க முடியும். அனைத்து மனுதாரர்களின் வாதங்களையும் விரிவாக கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆலை தரப்பு வாதங்களை முழுமையாக கேட்கவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது.

ஆலை அமைந்திருக்கும் பகுதியின் காற்றின் தரமும், தேசிய காற்று தர நிர்ணய அமைப்பின் தரமும் சமமாகவே உள்ளது. அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டுத் தான் ஆலை செயல்பட்டு வந்தது. ஆலை எவ்வித சுற்றுச்சூழல் மாசுவையும் ஏற்படுத்தவில்லை. இதை உயர் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை. எனவே ஆலையை திறக்க தற்காலிகமாக அனுமதியளிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதன்பிறகு தமிழக அரசு தனது வாதத்தில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது. ஆலையை மூடி அரசு பிறப்பித்துள்ள உத்தரவு கொள்கை ரீதியிலான உத்தரவு.

சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதால் அனைத்து அம்சங்களையும் தீர ஆராய்ந்த பிறகே ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. ஆலை மூடியது மூடியதுதான். முடிந்துபோன விவகாரத்தில் இடைக்கால நிவாரணம் கோர முடியாது.

ஆலை வெளியேற்றிய கழிவுகளால் நிலத்தடி நீர், குடிநீர் மோசமாக பாதிப்படைந்துள்ளது. ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x