

தமிழகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டுகள், படிமங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துக்களை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதில் அராபிக் மற்றும் பெர்சியன் கலாச்சார சின்னங்கள் நாக்பூரில் மையத்திலும், சமஸ்கிருதம் மற்றும் திராவிட பாரம்பரிய சின்னங்கள் மைசூர் மையத்திலும் உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை தற்போது மைசூரில் வைக்கப்பட்டுள்ளன. தமிழக பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும் அரிய பொருட்கள் ஏற்கனவே ஊட்டியில் பாதுகாக்கப்பட்டது. தற்போது அந்தப் பொருட்கள் மைசூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்கு முறையாக பராமரிக்கப்படாமல் பழங்கால பொருட்கள் சேதமடைந்து வருகிறது. எனவே மைசூரில் உள்ள பழங்கால பொருட்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மைசூரில் பழமையான கல்வெட்டுகளை சாதாரண கற்களை போன்று வைத்துள்ளனர். கல்வெட்டு படிமங்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது என்றார்.
மத்திய அரசு சார்பில், கல்வெட்டுகள், படிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. படிமங்கள் லேமினேசன் செய்யப்பட்டுள்ளது. பழங்கால பொருட்கள் பாதுகாப்பு மையம் அமைக்க ஊட்டியில் தட்டவெப் நிலை பாதுகாப்பாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மைசூர் மையத்தில் மொழி வாரியாக எத்தனை கல்வெட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன? எத்தனை கல்வெட்டுகள் படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன? இந்தியாவில் எந்தெந்த மொழிகளில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன? அவற்றில் எத்தனை கல்வெட்டுகள் படிமம் எடுக்கப்பட்டுள்ளது?எத்தனை படிமங்கள் சேதமடைந்துள்ளன? சேதமடைந்த கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள், படிமங்களை தமிழகத்திற்கு மாற்றினால் அவற்றை பாதுகாக்க தமிழக அரச வசதி ஏற்படுத்தி தருமா? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச. 11க்கு ஒத்திவைத்தனர்.