Published : 02 Dec 2020 12:24 PM
Last Updated : 02 Dec 2020 12:24 PM

கருணாநிதியின் இளவல்; பெரியார் பணி ஒன்றே தன் வாழ்வியலாகக்  கொண்டவர்: கி.வீரமணிக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

கி.வீரமணி - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (டிச. 02) தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கி.வீரமணி பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

"பெரியாரின் கரம் பற்றிக் கொள்கைப் பயிற்சி பெற்று, பெரியார் பணி ஒன்றே தன் வாழ்வியலாகக் கொண்டு, சமூகநீதிக் களத்தில் சமரசமற்ற போராளியாக, திராவிட இன உணர்வுச் சுடரொளியை அணையாமல் காக்கின்ற கைகளாக, அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் மிக்கவராக, கருணாநிதியின் இளவலாக, தாய்க் கழகத்தின் தலைவராக, 88-வது பிறந்தநாள் காணும் கி.வீரமணியை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்திய ஒன்றியத்திலும் தமிழ்நாட்டிலும், ஜனநாயகமும் சமூகநீதியும் கடும் சவாலுக்குள்ளாகியிருக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில், அவற்றைத் தீரமுடன் எதிர்கொண்டு திமுகவின் ஆட்சி அமையப் பாடுபடுவோம் எனத் தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக அறிவித்திருக்கும் கி.வீரமணிக்கு திமுக தலைவர் என்ற முறையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகுத்தறிவுப் பார்வையுடன், திராவிட இன, மொழி உணர்வு குன்றாமல், தொண்டறத்தால் பொழுதளந்து, மானுட விடுதலைக்காக அயராது பாடுபடும் கி.வீரமணியின் வழிகாட்டலில், அவர் நோக்கத்தை மனதில் தேக்கி, உறுதியுடன் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x