Last Updated : 01 Dec, 2020 09:09 PM

 

Published : 01 Dec 2020 09:09 PM
Last Updated : 01 Dec 2020 09:09 PM

கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவக் கல்வி வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சீட்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை இழந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகள் தேவஷாலினிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ சீட் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.5.54 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றனர்.

நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோம். எங்களால் அவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது. இதனால் மருத்துவ சீட்டை தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என நவ.21-ல் அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது முன்பே செய்திருந்தால் என் மகள் மருத்துவ சீட்டை தேர்வு செய்திருப்பார். என் மகளைப் போல் பல அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்து பணம் கட்ட முடியாமல் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப வழங்கப்படும் சீட்டுகளில் மனுதாரரைப் போன்ற மாணவர்களுக்கு தர வரிசை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார். இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x