அனுமதிபெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அனுமதிபெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து தலைவர்கள் சிலைகளை அகற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு அரசியல்வாதிக்ள் போட்டி போட்டு மரியாதை செலுத்துகின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் இந்த சிலைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே அனுமதி பெற்ற சிலைகளின் அருகே இருக்கும் ஏணிகளை அகற்றவும், அனுமதிபெறாத சிலைகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சிலைகள் மரியாதைக்காக வைக்கப்படுகின்றன. தற்போது சிலைகளை கூண்டுக்குள் வைக்கின்றனர். இதை பார்க்கும் போது சிலைக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது போல் தெரிகிறது. சிலைகளை அவமதிப்பதாகவும் உள்ளது. பல அரசியல்வாதிகள் ஆதாயத்துக்காக சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர். அப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிலால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.

பின்னர் மனு தொடர்பாக தமிழக அரசு டிச. 14-ல் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in