Published : 01 Dec 2020 07:58 PM
Last Updated : 01 Dec 2020 07:58 PM

கார்த்திகைத் தீபத் திருவிழா: கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் அண்ணாமலையார் பவனி

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் அண்ணாமலையார் இன்று (டிச.1) பவனி வந்து அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த 29-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்தக் குளத்தில் தெப்பல் உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. முதல் நாளில் சந்திரசேகரரின் உற்சவமும், 2-வது நாளான இன்று பராசக்தி அம்மனின் உற்சவமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 3-வது நாளான நாளை முருகரின் உற்சவம் நடைபெற உள்ளது.

மலையே மகேசன் என்றழைக்கப்படும் அண்ணாமலையைப் பக்தர்கள் கிரிவலம் செல்வதுபோல், திருவூடல் திருவிழா மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்குப் பிறகு என ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அண்ணாமலையார் அருள்பாலிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால், கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையாரின் கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில், சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் இன்று பவனி வந்து அருள்பாலித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x