Last Updated : 01 Dec, 2020 06:50 PM

 

Published : 01 Dec 2020 06:50 PM
Last Updated : 01 Dec 2020 06:50 PM

170 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 101 அடியை எட்டிய மேட்டூர் அணை

சேலம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குக் கடந்த ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட்டபோது 101 அடியாக இருந்த நீர்மட்டம், மீண்டும் 170 நாட்களுக்குப் பிறகு 101 அடியை எட்டியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்.

தென்மேற்குப் பருவமழை காரணமாக நடப்பாண்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திருப்திகரமாக இருந்தது. இதனை முன்னிட்டு, நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி அன்று காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால், 70 அடிக்குக் கீழ் அணையின் நீர்மட்டம் சென்றது. தென்மேற்குப் பருவ மழையைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையும் பெய்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, சில தினங்களுக்கு முன்பு 100 அடியை எட்டியது.

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101 அடியை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 12-ம் தேதி அணையின் நீர்மட்டம் 101 அடியாக இருந்த நிலையில், 170 நாட்கள் கழித்து மீண்டும் இன்று 101 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 7,126 கன அடியாக இருந்தது. இன்று காலை 6,559 கன அடியாகச் சரிந்துள்ளது. டெல்டாவில் மழை பெய்து வரும் நிலையில், பாசனத்துக்கான தண்ணீர்த் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, குடிநீர்த் தேவைக்காக அணையில் இருந்து 500 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 700 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 100.93 அடியாக இருந்தது. இன்று 101.27 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 66.49 டிஎம்சியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x