Published : 01 Dec 2020 02:32 PM
Last Updated : 01 Dec 2020 02:32 PM

நாளை புயலாக மாறுகிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தென் மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் குமரிக் கடல் பகுதிக்கு நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை அல்லது இரவில் இலங்கையைக் கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும்.

இதன் காரணமாக டிச.01 இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.02 அன்று தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.3 (காலை முதல் இரவு வரை) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.

சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

திருப்பூண்டி (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 4 செ.மீ., மயிலாடுதுறை (நாகப்பட்டினம்) 3 செ.மீ., நாகப்பட்டினம் , குடவாசல் (திருவாரூர்) தலா 2 செ.மீ., திருவாடானை (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), ராமேஸ்வரம், அகரம் சீகூர் (பெரம்பலூர்), பேரையூர் (மதுரை) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

டிசம்பர் 01 (இன்று) தெற்கு வங்கக் கடலில் மத்தியப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு இன்று மாலை வரை 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழகக் கடலோரப் பகுதி மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 02 அன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கைக் கடல் பகுதியில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழகக் கடலோரப் பகுதி கேரளக் கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 03 அன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழகக் கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் டிசம்பர் 04, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழகக் கடலோரப் பகுதி, சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x