Published : 01 Dec 2020 01:43 PM
Last Updated : 01 Dec 2020 01:43 PM

மியாவாக்கி அடர்வனம்; கே.கே.நகரில் 6,450 சதுர அடியில் 1,650 மரக்கன்றுகள் நடப்பட்டன: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு 

மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தில் கே.கே.நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மரக்கன்றுகளை நட்டுப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் மண்டலம், பகுதி-28, வார்டு-138. அசோக் பில்லர் சாலை, கே.கே.நகரில் ஆணையர் பிரகாஷ், இன்று (01.12.2020) மரக்கன்றுகளை நட்டுப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்கள், நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் மியாவாக்கி நகர்ப்புற காடுகள் என்ற முறையினைப் பயன்படுத்தி அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் 20,724 சதுர அடியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2,000 மரக்கன்றுகளும், வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-155, ராயலா நகர், 2-வது பிரதான சாலையில் 6,000 சதுர அடியில் ரூ.8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான 762 மரக்கன்றுகளும், சோழிங்கநல்லுார் மண்டலம், வார்டு-197, மாதிரி பள்ளி சாலையில் 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில் 2,800 மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் திட்டத்தில் இன்று கோடம்பாக்கம் மண்டலம், பகுதி-28, வார்டு-138. அசோக் பில்லர் சாலை, கே.கே.நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 8,339 சதுர அடி கொண்ட நிலத்தில் 6,450 சதுர அடியில் ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் 30 வகையான 1,650 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டன.

இந்த மியாவாக்கி அடர்வனத்தில் பாரம்பரிய மரவகைகளான வேம்பு, நாவல், நாகலிங்கம், பாதாம், மரமல்லி, ஸ்பாத்தோடியா/பட்டாடி, கொய்யா, கறிவேப்பிலை, மா, பெருநெல்லி, சிறுநெல்லி, தூங்குமூஞ்சி மரம், ஏழிலைப் பாலை, பலா, செண்பகம், பூ மருது, மகிழம், சப்போட்டா, சரக்கொன்றை, பூவரசு, நொச்சி, சீத்தாப்பழம், செம்மயிற் கொன்றை, மூங்கில், அத்தி, மருதாணி, புங்கம், செம்மந்தாரை, வசந்த ராணி, அச்சி நறுவிலி போன்ற மரவகைகள் கொண்டு அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) மேகநாத ரெட்டி, மத்திய வட்டாரத் துணை ஆணையர் பி.என்.ஶ்ரீதர், மண்டல அலுவலர் ஜெய்பீம், செயற்பொறியாளர்கள், உதவிச் செயற்பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x