

இந்தியப் பருத்திக் கழகத்துக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (டிச.1) வெளியிட்ட அறிக்கை:
"பருத்தி விலையை ஒழுங்கு செய்யவும், விலை ஆதரவுக் கொள்கைகளை அரசு மேற்கொள்வதற்குமான தலையாய நோக்கோடு அமைக்கப்பட்ட இந்தியப் பருத்திக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த சில பிரச்சினைகளை தங்களின் பார்வைக்குக் கொண்டு வர நான் விழைகிறேன். இக்கழகம் விவசாயிகளுக்கும், ஜவுளித் தொழிலுக்கும் இயற்கையாகவே பயன்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தியப் பருத்திக் கழகத்தின் சில நடவடிக்கைகள் அதன் உருவாக்க லட்சியங்களுக்கும், உள்ளார்ந்த விருப்பங்களுக்கும் முரணாக உள்ளன. ஊடகங்கள் மற்றும் தொழில் சார்ந்த வழிகள் மூலமாக கிடைக்கப் பெற்ற தகவல்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
கடந்த ஆண்டில் இந்தியப் பருத்திக் கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு 120 லட்சம் பேல்கள் விற்பனை ஆகாமல் இருப்பாக வைத்திருந்தது. இந்த நிலையில், இந்தியப் பருத்திக் கழகம் பெருமளவு இருப்பைக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விற்பனை செய்துள்ளது.
லூயிஸ் ட்ரேஃபஸ் நிறுவனம் - 10 லட்சம் பேல்
மஞ்சித் காட்டன் குரூப் - 15 லட்சம் பேல்
ரித்தி சித்தி - 15 லட்சம் பேல்
ஓலம்/க்ளென்கோர்/ மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் - 10 லட்சம் பேல்
மொத்தம் - 50 லட்சம் பேல்
இந்தியப் பருத்திக் கழக விலை - (விலைப் பட்டியல்படி) ரூ.36 ஆயிரத்து 500 (ஒரு கேண்டிக்கு)
கழி: மொத்த விற்பனைக் கழிவு > 2 லட்சம் பேலுக்கு மேல் எனில் ரூ.1,500/ ஒரு கேண்டிக்கு
நிறுவனஜ் கொள்முதல் விலை - ரூ.35 ஆயிரம்/ ஒரு கேண்டி
பட்டியல் விற்பனை விலை - ரூ.38 ஆயிரம்/ ஒரு கேண்டி
விலை வித்தியாசம் (இடைத்தரகர் லாபம்) - ரூ.3,000 / ஒரு கேண்டி
50 லட்சம் பேல் = 23.20 லட்சம் கேண்டிகள் × ரூ.3,000 (ஒரு கேண்டி) = ரூ.696 கோடி.
அதாவது, இடைத்தரகர்கள் அடைந்துள்ள லாபம் ரூ.696 கோடி.
அவர்கள் 50 லட்சம் பேல்களை சில சிறப்புச் சலுகைகளோடு (தவணையில் செலுத்துதல் உள்ளிட்டு) வாங்கியுள்ளனர். இப்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு தவணை முறையில் விற்ற பிறகு இந்தியப் பருத்திக் கழகம் விலையை உயர்த்த ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் ஏற்றப்பட்ட விலை விவரங்கள் தரப்பட்டுள்ளன.
இது தெரிவு செய்யப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு ரூ.700 கோடிக்கும் மேல் லாபத்தைத் தந்துள்ளது. இந்தத் தொகை எந்த வகையிலும் விவசாயிகளுக்கோ, ஜவுளித் தொழிலுக்கோ போய்ச் சேரவில்லை. இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. விசாரணை தேவைப்படுபவையாகவும் உள்ளன.
இதே நிறுவனங்கள் அடுத்தடுத்தும் இப்படிக் கொள்முதல் செய்துள்ளதாக அறிய வருகிறேன். அரசு நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி இதே தந்திரத்தைக் கையாண்டு லாபம் பார்த்துள்ளார்கள். இதன் வாயிலாக மிக அதிகமான நிதியாதாரக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியப் பருத்திக் கழகம் உண்மையான பயனீட்டாளர்களுக்கே விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் விரும்புகிற தரத்திலான பருத்தியைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதில் அதில் சம்பந்தப்படுபவர்கள் திருப்தி அடைகிற வகையிலான முறைமை வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆகவே, இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட்டு பொதுமக்கள் கவனத்திற்கு உண்மையைக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்.
இதற்கான விதிகள், ஒழுங்காற்று நடைமுறைகளை முறைப்படுத்தி ஓர் வெளிப்படையான செயல்பாட்டை எதிர்காலத்திற்கு உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.