Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலியில் ராகுல் ஆலோசனை: அதிமுகவை வீழ்த்த கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுரை

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை வீழ்த்த காங்கிரஸார் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் அகில இந்திய செயலாளர்கள் ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், எஸ்.ஜோதிமணி எம்.பி., சி.டி.மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், பிரவீன் சக்ரவர்த்தி, மாநில செயல் தலைவர்கள் கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், மயூரா எஸ்.ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்வது,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எப்படி வலிமைப்படுத்துவது, கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

தமிழ் மொழியின் தனித்தன்மை சிதைக்கப்படுவது, நீட் தேர்வு திணிப்பு, வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு போன்ற மத்திய பாஜக அரசின் தமிழக விரோத நடவடிக்கைகள் குறித்தும் இதற்கு துணைபோகும் அதிமுக அரசு குறித்தும் தீவிர பிரச்சாரம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்றமுற்போக்குக் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகஉள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில் பேசிய ராகுல் காந்தி, “தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலமாக கட்சி மேலும் வலிமை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக ஆட்சியால் தற்போது பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற வகையில் வருகிற பேரவைத் தேர்தல் அமைய காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x