Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திமுக விரைவில் போராட்டங்களை அறிவிக்கும்: உதயநிதி ஸ்டாலின் தகவல்

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற திமுக தேர்தல் பிரச்சாரபயணத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தை நேற்றுபார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்களைச் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரச்சாரத்துக்கு செல்கின்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பது தெரிகிறது. அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தை பற்றி பேசத் தொடங்கியதுமே ரூ.800 கோடிஎன்று மக்கள் குரல் எழுப்புகின்றனர். அந்த அளவுக்கு இந்த ஆட்சியைப் பற்றி புரிந்து வைத்துள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாகவே இருக்கும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்துபல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் என்னிடம் மனு அளித்துள்ளனர். அவற்றை திமுக தலைவரிடம் ஒப்படைக்க உள்ளேன். அதன் பின்னர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரிகட்சித் தலைமை போராட்டங்களை அறிவிக்கும் என்றார்.

மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, டிஆர்பி ராஜா எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, திருவாரூரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x