Last Updated : 30 Nov, 2020 07:58 PM

 

Published : 30 Nov 2020 07:58 PM
Last Updated : 30 Nov 2020 07:58 PM

ஆள்மாறாட்டத்துக்காகப் பெண்ணைக் கொன்று எரித்த வழக்கு: வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை- கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

வழக்கறிஞர் ராஜவேல், மோகனா.

கோவை

ஆள்மாறாட்டத்துக்காகப் பெண்ணைக் கொலை செய்து எரித்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துக் கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் அம்மாசை (52). கணவருடன் ஏற்பட்ட பணப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வழக்கறிஞர் ராஜவேலை 2011 டிசம்பர் 10-ம் தேதி அணுகியுள்ளார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அம்மாசையைக் காணாததால் அவரது மகள் சகுந்தலாதேவி ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையிலும் அம்மாசை குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால், அந்த வழக்கை போலீஸார் கைவிட்டனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி உதவி ஆணையர்புதிதாகப் பொறுப்பேற்றார். வழக்கறிஞர் ராஜவேலின் மனைவி மோகனா, தனது இறப்புப் பதிவை ரத்து செய்து நீதிமன்றத்தில் பெற்று, சமர்ப்பித்த உத்தரவை அவர் பார்வையிட்டுள்ளார். உயிருடன் இருப்பவர் தனது இறப்புப் பதிவு ரத்து செய்தது விநோதமாக இருக்கவே, சந்தேகம் அடைந்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ராஜவேலின் ஓட்டுநர் பழனிச்சாமி, உதவியாளர் பொன்ராஜ் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. வழக்கறிஞர் ராஜவேலின் மனைவி மோகனா, ஒடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததால், அவர் மீது 2 வழக்குகள் இருந்துள்ளன. இதனால், போலீஸார் அவரைத் தேடி வந்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க, தான் இறந்துவிட்டதாக சான்று பெற்றுச் சமர்ப்பித்துக் காப்பாற்றுமாறு ராஜவேலிடம் மோகனா தெரிவித்துள்ளார். இதற்காகத் தனது அலுவலகத்துக்கு வந்த அம்மாசையைக் கொலை செய்ய ராஜவேல் திட்டமிட்டார்.

பின்னர், தனது ஓட்டுநரான பழனிச்சாமி, உதவியாளர் பொன்ராஜ் ஆகியோர் உதவியுடன் கொலை செய்துள்ளார். மருத்துவர் ஒருவரிடம் இறந்தது தனது மனைவிதான் என அவர் பெயரில் சான்று பெற்று, ஆத்துப்பாலம் மின் மயானத்தில் டிசம்பர் 12-ம் தேதி உடலை எரித்துள்ளார். மாநகராட்சியிலும் ஏமாற்றி இறப்புச் சான்று பெற்றுள்ளார்.

அதன்பிறகு, ஒரு சொத்தை வாங்குவதற்காக மோகனா சார் பதிவாளர் அலுவலக்தை அணுகியுள்ளார். இவர் பெயரில் ஏற்கெனவே இறப்புச் சான்று உள்ளதாக அந்த அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், சொத்தை வாங்க முடியாமல் போகும் என்பதால், தனது பெயரில் உள்ள இறப்புச் சான்று தவறானது என்று கூறி நீதிமன்றத்தை அணுகி அந்தப் பதிவை மோகனா ரத்து செய்தது விசாரணையில் தெரியவந்தது.

உயிரிழந்த அம்மாசை

கேரளாவில் இருவரும் கைது

இதையடுத்து, போத்தனூர் போலீஸார் அளித்த தகவல் அடிப்படையில் ரத்தினபுரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியது. பின்னர், கேரள மாநிலம் கோவளத்தில் பதுங்கியிருந்த ராஜவேலையும், அவரது மனைவி மோகனாவையும் 2013-ம் ஆண்டு போலீஸார் கைது செய்தனர். கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி முகமது பரூக் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் தம்பதியான ராஜேவேல், மோகனா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் மற்றும் ஓட்டுநர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உ.சங்கர நாராயணன் ஆஜரானார். இதற்கிடையே, 4-வது குற்றவாளியான அறிவிக்கப்பட்ட பொன்ராஜ் வழக்கு விசாரணையின்போது பிறழ் சாட்சியாக மாறினார். இதனையடுத்து அவர் மீது தனியாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x