Last Updated : 30 Nov, 2020 07:33 PM

 

Published : 30 Nov 2020 07:33 PM
Last Updated : 30 Nov 2020 07:33 PM

மருத்துவப் படிப்பில் இடம் உறுதியாகியும் இணைய வசதி இல்லாததால் கலந்தாய்வை தவறவிட்ட சிவகங்கை மாணவி

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் இடம் உறுதியான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர், இணைய வசதி இல்லாததால் கலந்தாய்வில் பங்கேற்காமல் தவறவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே குருந்தங்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல், சந்திரா தம்பதியினரின் மகள் கவுசல்யா. பழையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் பிளஸ் 2 தேர்வில் 1111 மதிப்பெண் பெற்றார்.

மருத்துவராக ஆசைப்பட்ட அவர் நீட் தேர்வு எழுதினார்.

தோல்வியடைந்ததால் மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். இருந்தபோதிலும் தனது மருத்துவர் கனவால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வந்தார். இந்தாண்டு மூன்றாவது முறையாக தேர்வு எழுதிய அவர், 252 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரது குடும்பத்தாரிடம் மொபைல் போன் கூட இல்லாததால், உறவினர் ஒருவர் உதவியால் மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதனை தனது விண்ணப்பத்தில் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அவருக்கு பொது பிரிவில் 145-வது தரமும், பிற்பட்டோர் பிரிவில் 46-வது தரமும் பெற்றார்.

மேலும் அவரை நவ.18-ம் தேதி கலந்தாய்வுக்கு அழைத்துள்ளனர். இத்தகவலை மருத்துவ கல்லூரி இயக்குநரகம் மாணவியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளது.

இணைய வசதி இல்லாததால் இந்த தகவலை கவுசல்யா கவனிக்கவில்லை. இந்நிலையில் அவரை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சிலருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை அறிந்த பிறகே, கவுசல்யா தனது மின்னஞ்சல் முகவரியை பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு அழைப்பு கடிதம் வந்துள்ளது தெரியவந்தது.

படிப்பறிவு இல்லாத ஏழ்மை பெற்றோராலும், இணைய வசதி இல்லாததாலும் மருத்துவ படிப்பில் இடம் உறுதியாகியும் கலந்தாய்வை தவறவிட்ட மாணவிக்கு அரசு கைகொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x