

புதுச்சேரியில் சிறையில் இருக்கும் ரவுடிகளிடம் இருந்து வரும் உத்தரவுகளால் தொடர் கொலைகள், மிரட்டல் அதிகரிப்பதால், அவர்களை வெளிமாநிலச் சிறைகளுக்கு மாற்றும் பணிகள் தீவிரமாகியுள்ளன.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாகக் கொலைகள், தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பு ஆகியவை அதிகரித்தன. விசாரணையில் சிறையிலிருக்கும் முக்கிய ரவுடிகளே இதற்குப் பின்புலமாக இருப்பது தெரியவந்தது. அத்துடன் சிறையில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் செல்போன்கள் மூலம் அங்கிருந்து வெளியிலுள்ள கூட்டாளிகளுக்குத் தகவல் அனுப்பி, இதைச் செய்வதும் கண்டறியப்பட்டது. சிறையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும் மீண்டும் தொடர்ந்து சர்வசாதாரணமாகக் கிடைத்து வந்தன.
இதையடுத்துச் சிறையிலுள்ள முக்கிய ரவுடிகள் ஐவரைப் புதுச்சேரியிலிருந்து வெளிமாநிலச் சிறைகளுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் ஒப்புதல் தந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர்களை வெளிமாநிலச் சிறைகளுக்கு மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு விரைந்து எடுத்து வருகிறது.
இது தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஐந்து முக்கிய ரவுடிகள் புதுச்சேரியிலிருந்து வெளிமாநிலச் சிறைகளுக்கு மாற்றப்பட உள்ளனர். அவர்கள் வடமாநிலச் சிறைகளுக்குக்கூட மாற்றப்படலாம். இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு, விரைவில் அதற்கான பணிகள் ரகசியமாக மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தனர்.