Last Updated : 30 Nov, 2020 06:23 PM

 

Published : 30 Nov 2020 06:23 PM
Last Updated : 30 Nov 2020 06:23 PM

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிரான நீதிபதி கலையரசன் குழு விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி லால்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் 200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரிடமும் 13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்தாகவும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பினார்.

இந்தப்புகார் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் 11.11.2020-ல் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை.

அது தெடார்பாக முதல் கட்ட விசாரணை நடத்தாமலும், துணை வேந்தரிடம் விளக்கம் கேட்காமலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கள் ஏற்பட்டுள்ளது.

சூரப்பாவுக்கு எதிராக புகார் அளித்தவர் புகாரில் போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்துள்ளார். அவர் புகாரில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது. புகார்தாரரின் உண்மை தன்மையை ஆராயமல் விசாரணை குழு அமைத்தது சட்டவிரோதம். எனவே, நீதிபதி கலையரசன் குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு பணம் வாங்கப்பட்டதாக புகார் வந்ததால், விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், இது போல புகார் கூறப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்றனர்.
அதற்கு அரசு வழக்கறிஞர், அண்ணா பல்கலைக்கழக விதிப்படியே விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர், புகார் தொடர்பாக முதற் கட்ட விசாரணை நடத்தாமலேயே விசாரணை குழு அமைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வழக்கறிஞர், முதற்கட்ட விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் இல்லை. இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், தமிழகத்தில் சமீபகாலமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படவில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பிலும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அது குறித்து விசாரிக்கவில்லை.

புகார் கடிதம் வந்ததும், அதில் முகாந்திரம் உள்ளதா?இல்லையா? என பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்? சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? இதுபோன்ற ஊழல் புகார் கூறப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? என கேள்வி எழுப்பினர்.

பின்னர், சூரப்பா மீது முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார், அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 2-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x