Published : 30 Nov 2020 02:52 PM
Last Updated : 30 Nov 2020 02:52 PM

உருவானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; நாளை புயலாக மாறுகிறது; டிச.2-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் டிச.2ஆம் தேதி அன்று சென்னையில் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகைப் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை இலங்கையைக் கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரும். இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புயல் இலங்கையைக் கடக்க வாய்ப்புள்ளது. இலங்கையைக் கடந்தபின் குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்பது தற்போதைய நிலை.

மழை விவரம்:

டிசம்பர் 1 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 2 அன்று தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

டிசம்பர் 3 அன்று தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்யும்.

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகக் கடலோர மாவட்டங்கள், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

டிசம்பர் 4-ம் தேதியன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

பொன்னை அணை (வேலூர்) 3 செ.மீ., பொன்னேரி (திருவள்ளூர்), பேரையூர் (மதுரை), பழனி (திண்டுக்கல்), மதுரை, சீர்காழி (நாகப்பட்டினம்) தலா 2 செ.மீ., தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), குடவாசல் (திருவாரூர்), சோழவரம் (திருவள்ளூர்), மயிலாடுதுறை (நாகப்பட்டினம்), விருஞ்சிபுரம் (வேலூர்), குன்னூர் (நீலகிரி) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நவம்பர் 30 அன்று தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 1 அன்று தென்மேற்குக் கடல், மன்னார் வளைகுடா கடல், தமிழகக் கடலோரப் பகுதி, கேரளக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 2 அன்று தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா கடல், தென் தமிழகக் கடலோரப் பகுதி, தெற்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 3 அன்று தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 4 அன்று வங்கக் கடலின் மத்தியப் பகுதி, கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x