Last Updated : 30 Nov, 2020 11:11 AM

 

Published : 30 Nov 2020 11:11 AM
Last Updated : 30 Nov 2020 11:11 AM

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் இன்று மாலை டிஸ்சார்ஜ்

மருத்துவமனைக்குள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனைக்கு வீல் சேரில் அழைத்துச் செல்லப்படும் பேரறிவாளன்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என, அவரது தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பேரறிவாளனை 30 நாட்களில் பரோலில் விடுவிக்க அனுமதி அளித்தது. கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த 6-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 23-ம் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 7-ம் தேதி சிகிச்சைக்காக பேரறிவாளன் விழுப்புரம் வந்து சிகிச்சைக்குப் பின் ஜோலார்பேட்டை திரும்பினார்.

இந்நிலையில், மீண்டும் பரோலை நீட்டிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஒரு வாரத்திற்குப் பரோலை நீட்டித்து வரும் டிச.7-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி மாலை திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் தன் தாயார் அற்புதம் அம்மாளுடன் வருகை புரிந்தார். அவருக்குச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (நவ.30) மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைக்குள் அவர் பரிசோதனைக் கூடத்திற்கு வீல் சேரில் அழைத்துச் செல்லும்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை மீண்டும் ஜோலார்பேட்டைக்குப் பேரறிவாளன் புறப்பட்டுச் செல்வார் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x