

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதால் அதனைக் கண்டித்து திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென்று திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன் கூறியுள் ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் மிகப் பெரிய வணிக வளாகமாக கோயம்பேடு வணிக வளாகம் உள்ளது. ஆனால், அங்குள்ள சுகாதார சீர்கேட்டினால் பொதுமக்கள் மிகவும் அல்லல்படுகிறார்கள். கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. காய்கறி கழிவுகள் மிகுந்துள்ளன. வணிக வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, இதனைக் கண்டித்து திமுக தென் சென்னை மாவட்டம் சார்பில் எனது தலைமையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் வரும் 6-ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.