Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு நாளிலேயே பத்திரங்கள் வழங்கும் நடைமுறையில் பதிவுத் துறை தலைவரின் கண்காணிப்பால் முன்னேற்றம்: பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்ப்பு

சென்னை

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு நாளிலேயே பத்திரங்களை திருப்பி வழங்கும் நடைமுறை பதிவுத்துறை தலைவரின் நேரடி கண்காணிப்பால் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த 27-ம் தேதி பதிவு செய்த ஆவணங்களில் 94 சதவீதம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது ஆன்லைன் மூலம்டோக்கன் பெற்று பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பதிவு செய்த அன்றே பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில், பல்வேறு காரணங்களை கூறி, உரிய பதிவுக் கட்டணம், முத்திரை தீர்வை செலுத்தியும் பத்திரங்களை நிலுவை வைத்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

ஆய்வுக் கூட்டம்

இதற்கிடையில், தமிழக பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடந்த நவ.17-ம்தேதி அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய அமைச்சர், ‘‘இந்த 2020-21 நிதியாண்டுக்கு பதிவுத் துறை ரூ.14,435.25 கோடி வருவாய் இலக்கை அடைய வேண்டும். இதற்காக, சரியாக உள்ள நிலுவை ஆவணங்களை உடனே விடுவிக்க வேண்டும். சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் உள்ளிட்ட உத்திகளை கையாள வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

மேலும், தாமதம் செய்யும் அலுவலகங்களை ஆய்வு செய்துஉரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அறிக்கை அளிக்க உத்தரவு

இதுதொடர்பாக, தினசரி பதிவுகள், நிலுவை ஆவணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு பதிவுத் துறை துணை தலைவர்களுக்கு பதிவுத் துறை தலைவர் பொ.சங்கர் அறிவுறுத்தியிருந்தார். தொடர்ந்து, பதிவு நடவடிக்கைகளை கண்காணித்தும் வந்தார்.

94% திருப்பி வழங்கி சாதனை

இதனால், நாள்தோறும் பத்திரங்கள் பதிவு நாளியே திருப்பி வழங்குவது உயர்ந்து வந்தது. நவ.27-ம் தேதி பதிவு செய்யப்பட்டு திருப்பி வழங்க வேண்டிய 15,433 பத்திரங்களில் 14,591 பத்திரங்கள் பதிவு செய்த அன்றே திருப்பி வழங்கப்பட்டன. இது, பதிவு செய்த ஆவணங்களில் 94 சதவீதம் ஆகும். இதனால் பொதுமக்கள் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுபத்திரங்களை பெற வரவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x