Last Updated : 28 Nov, 2020 05:37 PM

 

Published : 28 Nov 2020 05:37 PM
Last Updated : 28 Nov 2020 05:37 PM

இந்தியாவில் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் 22 கேள்வி- டிச. 9-ல் பதிலளிக்க உத்தரவு

மதுரை

இந்தியாவில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 22 கேள்விகளுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அல்லது திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கும் மையம் திறக்கக்கோரி சின்னச்சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்திய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் மன நோயாளியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்கு காரணியாகவும், தற்கொலைக்கு தூண்டுவதாகவும் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்து காப்பாற்றலாம்.

ஆனால் விழிப்புணர்வு குறைவு, போதிய மருத்துவர்கள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் மனநோயாளிகளின் எண்ணிக்கை பத்து ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதனால் இந்த வழக்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மத்திய நிதித்துறை செயலர், இந்திய மருத்துவ கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு, நிமான்ஸ் இயக்குனர், இந்திய மனவியல் கழகம் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் மனவியல் மற்றும் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் கள ஆய்வு மேற்கொண்டு உள்ளதா ? இந்திய மக்களில் அதிகளவில் சந்திக்கும் உளவியல் பிரச்சினை என்ன?, இந்தியாவில் போதுமான அளவு மனநல மருத்துவமனைகள் உள்ளனவா?, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் மனநல மருத்துவமனைகள் தொடங்கப்படாதது ஏன்?உளவியல் கல்வி கற்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கக்கூடாது?

பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனை போல், இந்தியாவில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மண்டலங்களில் ஏன் மருத்துவமனை தொடங்கக்கூடாது? மனநல மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறதா? இந்தியாவில் எத்தனை மனநல மருத்துவர்கள் உள்ளனர்? தேவைப்படும் மனநல மருத்துவர்கள், பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
ஒவ்வொரு மாவட்டங்களில் தாலுகா அளவில் மனநல மருத்துவர் நியமிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனநல பாடங்களை கற்பிக்க வெளிநாட்டு உளவியல் நிபுணர்களை பயன்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? பள்ளிகளில் உளவியல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் டிச. 9-ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x