Last Updated : 28 Nov, 2020 05:35 PM

 

Published : 28 Nov 2020 05:35 PM
Last Updated : 28 Nov 2020 05:35 PM

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

பிரதிநிதித்துவப் படம்

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையும், வட கிழக்குப் பருவ மழை பொய்க்காமல் பெய்தததின் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம், இந்தாண்டில் நேற்று (நவ. 27) நான்காவது முறையாக 100 அடியை எட்டியது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதேபோல, மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு அளவும் விநாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் கால்வாய் பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. நடப்பாண்டு கால்வாய் பாசனத்துக்கு தேவையான நீர் அணையில் இருந்து தொடர்ந்து விடப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் கடை மடை வரை செல்ல வேண்டும் என்பதால், நீர் திறப்பு அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேட்டூர் அணைக்கு நேற்று 8,111 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று (நவ. 28) காலை 7,013 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 250 கனயாக திறக்கப்பட்டிருந்த நீர் திறப்பு இன்று காலை முதல் விநாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் நேற்று 100 அடியாக இருந்தது, இன்று காலை 100.18 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 65.07 டிஎம்சி-யாக உள்ளது.

கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x